மீண்டும் பழனியில் களம் காண்கிறாரா ஐ.பி.செந்தில்குமார் அறிவாலயத்தில் விருப்பமனு தாக்கல் செய்ததால் தொண்டர்கள் உற்சாகம்!

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் வேட்பாளர் தேர்வுக்கான விருப்பமனு தாக்கல் செய்யும் பணி சென்னை அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக, திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ., இன்று சென்னை திமுக தலைமைக் கழகத்தில் தனது விருப்பமனுவை முறைப்படி தாக்கல் செய்தார். பழனி தொகுதியில் கடந்த இரண்டு முறையும் அமோக வெற்றி பெற்று, அத்தொகுதியை திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றியவர் என்பதால், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்துள்ள செய்தி மாவட்ட உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் பழனி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய ஐ.பி.செந்தில்குமார், தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான குடிநீர் வசதி, சாலை மேம்பாடு மற்றும் ஆன்மிகத் தலமான பழனியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். குறிப்பாக, விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களைத் தொகுதி வாரியாக ஒருங்கிணைத்ததில் இவரது பங்கு முக்கியமானது எனக் கருதப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தைச் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் ஐ.பி.செந்தில்குமார் ஆற்றிய பணி, கட்சித் தலைமைக்கு அவர் மீதுள்ள நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

விருப்பமனுத் தாக்கலின் போது, திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் உடனிருந்தனர். 2026 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற இலக்கோடு, தென் தமிழகத்தின் முக்கியத் தொகுதியான பழனியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யப் போவதாக ஐ.பி.செந்தில்குமார் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பழனி முருகன் கோயிலின் கிரிவலப் பாதை மேம்பாடு மற்றும் அடிவாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகள் தொகுதி மக்களிடையே அவருக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள நிலையில், இந்த விருப்பமனுத் தாக்கல் திண்டுக்கல் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version