மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி3,000டன் நெல் கொள்முதல், சேமிப்பு & நகர்வு பணி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 96,000 ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 99.77 சதவீதம் கொள்முதல் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்படாமல், மழையில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மணக்குடி, கிடாரங்கொண்டான் கிராமங்களில் உள்ள கொள்முதல் நிலையங்கள், சித்தர்காடு நவீன அரிசி ஆலையில் உள்ள சேமிப்புக் கிடங்கு, மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் ஈரோடு மாவட்டத்துக்கு அரவைக்கு அனுப்புவதற்காக லாரிகளில் ஏற்றி வரப்பட்டுள்ள நெல் மூட்டைகள் ஆகியவற்றை பார்வையிட்டு கொள்முதல் பணிகள், நெல் மூட்டைகள் நகர்வு, நெல்லின் ஈரப்பதம் உள்ளிட்டவை குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 39,640 ஹெக்டேரில் குறுவை பயிரிடப்பட்டு, இதுவரை 39,549 (99.77 சதவீதம்) ஹெக்டேரில் அறுவடை முடிவடைந்துள்ளது. 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செப்.1-ஆம் தேதிமுதல் இதுவரை 1,20,354 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 1,01,672 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக நகர்வு செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள 18,683 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு, நகர்வு செய்யப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 150 லாரிகள் மூலம் 3 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இயக்கம் செய்யப்படுகிறது. தினசரி 1 அல்லது 2 ரயில்கள் மூலம் 2,000 மெட்ரிக் டன் முதல்; 4,000 மெ.டன் வரை நெல் வெளிமாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 24,688 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, இதுவரை ரூ.303.84 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1.03 கோடி வரவு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நளினா, முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Exit mobile version