புதுடில்லி : 2026-28ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC) உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது. இது சர்வதேச தளத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் தாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
ECOSOC அமைப்பு என்பது உலகளாவிய பொருளாதாரம், சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான கொள்கைகள் மீது ஆலோசனை வழங்கும் மற்றும் முன்னெடுப்புகளை ஒருங்கிணைக்கும் ஐ.நா. அமைப்பின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும்.
இந்தியாவின் புதிய பதவிக்காலம் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஆரம்பமாகி, 3 ஆண்டுகள் நீடிக்கிறது. இதற்கு முன் இந்தியா 2008 முதல் 2020 வரை நான்கு முறை இந்த கவுன்சிலில் உறுப்பினராக இருந்துள்ளது. தற்போது, இது 18வது முறையாக இந்தியா ECOSOC உறுப்பினராக தேர்வாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
தேர்தலில் இந்தியாவுக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நாடுகளுக்கும் தனது நன்றி தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், “ECOSOC அமைப்பின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் முயற்சிகளையும், வளர்ச்சி சார்ந்த பணிகளையும் இந்தியா உறுதியாக முன்னெடுக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.