மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நில அளவை களப்பணியாளர்கள் இன்றுமுதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநிலத் துணைத் தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நில அளவையர் துணை ஆய்வாளர், ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும், ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் சங்கம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தோழமை சங்கத்தினரும் கலந்து கொண்டனர். நில அளவையர்களின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால் நில அளவை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

















