சிவபெருமான் பாண்டிய மன்னனாக பிறந்து சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்து தன்னைத்தானே வழிபட்ட தலம்.இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகின்ற தலங்களுள் இதுவும் ஒன்று.
இத்தலத்து இறைவனை வணங்கினால் இம்மை என்றால் இப்பிறவி மறுமை என்றால் மரும் பிறவி பிணி இவற்றையெல்லாம் நீக்கி முக்தி கிடைக்கும்.
இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பிருதிவி தலம் ஆகும்.
இத்திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. வேண்டுதல்கள் உடனுக்குடன் நிறைவேறுகிறது. அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஒன்றான வளையல் விற்ற திருக்கண் மண்டபமாக விளங்குகிறது. பதஞ்சலி முனிவர் இங்கு வந்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. சிவபெருமானே சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் இது! எனவே இந்தத் தலத்தை, ஆத்ம லிங்க ஷேத்திரம் என்று போற்றுகின்றன.
அம்பாளின் திருநாமம் – ஸ்ரீமீனாட்சியம்மை. ஸ்வாமி – ஸ்ரீசொக்கநாதர். இம்மை மற்றும் மறுமையில், உலக உயிர்களின் நன்மைக்காக சிவபெருமான் மேற்கு நோக்கியபடி அமர்ந்து, சிவலிங்கத்தை கிழக்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவே, இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், இம்மையிலும் மறுமையிலும் வருகிற எல்லா இடர்பாடுகளையும் கருணையுடன் களைந்து, அருள்பாலிப்பார் என்கிறது ஸ்தல புராணம்.
ஸ்ரீவரஸித்தி விநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீமத்திய புரி அம்மன், ஸ்ரீகால பைரவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை ஆகியோரும் இங்கே அருள்பாலிக்கின்றனர்.
மதுரையை ஆண்ட மீனாட்சி திக்விஜயம் செய்து மூன்று உலகங்களையும் வென்றார். கடைசியில் கயிலாயத்திற்கு செல்கிறார் அங்கு உலகு நாயகனான சிவபெருமானை சந்தித்த உடனே சக்தி சாந்தமடைகிறார்.

மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடக்கிறது. மதுரையில் சுந்தரேஸ்வரர் எட்டு மாதமும் மீனாட்சி நான்கு மாதமும் ஆட்சி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.
மன்னர்கள் ஆட்சி பொறுப்பேற்கும் முன் சிவபூஜை செய்ய வேண்டும் என்பது மரபு. இந்த மரபை தானும் கடைபிடிக்கவேண்டும் என்பதற்காக சுந்தரேஸ்வரர் தன் ஆத்மாவை சிவ லிங்கமாக பிரதிஷ்டை செய்து அதற்கு தானே பூஜை செய்து பின்பு ஆட்சி பொறுப்பேற்றுக்கொண்டார். இவ்வாறு சுந்தரேஸ்வரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் சுந்தரபாண்டிய மன்னனான அவருக்கே வரம் அருளிய லிங்கமே இம்மையிலும் நன்மை தருவார் என அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் ஜுரத்தைக் நீக்கும் ஜுரதேவர், மனைவி ஜுரசக்தியுடன் காட்சி அளிக்கும் சன்னதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் விசாலாட்சியுடன் வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். இக்கோயில் சண்டிகேஸ்வரை சிவனிடம் பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர் என்று அழைக்கிறார்கள். பைரவர் சன்னதி புகழ்பெற்றது.
இங்கு அம்பாள் சன்னதி பீடத்தில் கல்லால் ஆன ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது.
திருமணமாகாதவர்கள் இக்கோயில் அம்மனை வேண்டினால் நல்ல வரன் அமையும் என்பதால் அம்மனுக்கு “மாங்கல்ய வரபிரசாதினி’ என்ற பெயருமுண்டு. இப்பிறப்பில் செய்த பாவங்களை இப்பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால், இக்கோயில் மூலவர் சொக்கநாதரை இம்மையிலும் நன்மை தருவார் என்று அழைக்கப்படுகிறார். தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் அக்னி ஸ்தலம் பற்றி அடுத்த பாகத்தில் காணலாம
















