தேனி நகராட்சியின் 12-வது வார்டுக்கு உட்பட்ட கக்கன்ஜி காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் முற்றிலும் முடங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கக்கன்ஜி காலனியில் உள்ள 2 பிரதான சாலைகள் மற்றும் 7 குறுக்குத் தெருக்களில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் விரிவாக்கப் பகுதியாக உள்ள மூன்றாவது தெருவின் கடைசி வரை மட்டுமே பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக உள்ள வீடுகளுக்கு முறையான சாக்கடை கட்டமைப்பு இல்லாததால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களிலேயே ஆறாக ஓடும் அவல நிலை நீடிக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடும் நிலவி வருகிறது.
குறிப்பாக, மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தெருக்களில் குளம் போல் தேங்குவதால் முதியவர்கள், பெண்கள் மற்றும் பள்ளிச் செல்லும் குழந்தைகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருவில் ஓடும் கழிவுநீரில் இருந்து உருவாகும் வால்புழுக்கள் வீடுகளுக்குள் புகுவதால் தொற்று நோய்கள் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதிவாசி முருகவேல் கூறுகையில், “பாதாள சாக்கடை வசதி இல்லாதது ஒருபுறமிருக்க, குடிநீர் விநியோகமும் நான்கு நாட்களுக்கு ஒருமுறை அரை மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அனைத்து தெருக்களிலும் பேவர் பிளாக் கற்கள் பதித்து, சாக்கடை வசதியை மேம்படுத்த வேண்டும் எனப் பலமுறை மனு அளித்தும் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது” என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
மேலும், இப்பகுதியில் குப்பைகளைச் சேகரிக்கத் துப்புரவுப் பணியாளர்கள் முறையாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குப்பை வண்டி வருவதால், வேறு வழியின்றி மக்கள் தெருவோரங்களில் குப்பைகளைக் கொட்டுகின்றனர். இதனால் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்குப் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலன் நகருக்குச் செல்ல வேண்டியுள்ளதால், கக்கன்ஜி காலனியிலேயே புதிய நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என்பதும் இவர்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. பயன்படுத்தப்படாத பெண்கள் கழிப்பறையைச் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், விரிவாக்கப் பகுதியை முழுமையாக நகராட்சியுடன் ஒருங்கிணைத்து அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
