2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கியத் திருக்கோயில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் நகரின் காவல் தெய்வமான அபிராமி அம்மன் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் குடும்பம் சகிதமாக வந்து நெய் விளக்கேற்றி, புத்தாண்டில் அமைதியும் வளமும் வேண்டியும் வழிபாடு நடத்தினர். இதேபோல், கோட்டை மாரியம்மன் கோயிலிலும் பக்தர்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
மாவட்டத்தில் உள்ள வைணவத் தலங்களான மலையடிவாரம் சீனிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில் மற்றும் நாகல் நகர் வரதராஜ பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு விசேஷ புஷ்ப அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ரயில்வே ஸ்டேஷன் ரயிலடி விநாயகர், பாரதிநகர் புவனேஸ்வரி அம்மன், 108 நன்மை தரும் விநாயகர், என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் மேற்கொண்டனர். சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் மூலவருக்குத் திரவிய அபிஷேகமும், அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் திருப்பதி ஏழுமலையான் அலங்காரமும் செய்யப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆன்மீக கொண்டாட்டங்களுக்கு மத்தியில், திண்டுக்கல் நகரில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியது. வெள்ளை விநாயகர் கோயில் அருகே புத்தாண்டு பிறப்பை வரவேற்கத் திரண்டிருந்த மக்களிடையே, இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (S.P.) பிரதீப் அவர்கள் நேரில் சென்றார். அதிகாரியைப் பார்த்த மக்கள் உற்சாகமடைந்து, தங்களது கொண்டாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். மக்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று, எஸ்.பி. பிரதீப் அவர்கள் அங்கிருந்த சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இந்த எளிமையான செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பலரும் அதிகாரியுடன் புகைப்படம் எடுத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வடமதுரை, எரியோடு, கன்னிவாடி மற்றும் ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் புத்தாண்டு கலைகட்டியது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், அய்யலூர் வண்டிகருப்பணசாமி கோயில் மற்றும் தென்னம்பட்டி சவடம்மன் நந்தீஸ்வரன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் புத்தாண்டு பிறப்பை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சிறப்பாகச் செய்திருந்தது.
