விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் பகுதியில், மன்னராட்சி காலத்தில் மிகவும் அகலமாக அமைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ராணி மங்கம்மாள் சாலை’ இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, மிகக் குறுகிய சந்து போல மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது. தளவாய்புரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி செட்டியார்பட்டி பேரூராட்சி மற்றும் முகவூர் வரை நீளும் இந்த முக்கியச் சாலையில், இருபுறமும் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வணிகப் போட்டி காரணமாகப் பெரும்பாலான கடை உரிமையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைத் தாண்டி, சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துச் செட் அமைத்துள்ளனர். மின் கம்பங்கள் மற்றும் நிழல் தரும் மரங்களையும் கடந்து இந்த ஆக்கிரமிப்புகள் நீண்டுள்ளதால், வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
தளவாய்புரம் சுற்றியுள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இதுவே நுழைவாயிலாக உள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் சரக்கு லாரிகள் இந்தப் பாதையைப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்வோரும், பள்ளி மாணவர்களும் தளவாய்புரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் முதல் செட்டியார்பட்டி வரையிலான பகுதியைத் கடக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவசரத் தேவைக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூடச் செல்ல முடியாமல் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்கிரமிப்புகளால் சாலை சுருங்கியதால், பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடையும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
நெடுஞ்சாலைத் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் மெத்தனப் போக்கே இந்த ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி சாலையை ஆக்கிரமித்து வணிகம் செய்வோர் மீது இதுவரை எவ்விதக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. “மங்கம்மாள் சாலை” என்ற பெயரே மறைந்து போகும் அளவிற்குச் சாலையின் அகலம் குறைந்து விட்டதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனப் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றிச் சாலையை விரிவுபடுத்துவதுடன், இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்து நெரிசலைக் குறைக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.













