மூணாறில் ‘படையப்பா’ யானை அட்டகாசம் மளிகைக் கடையை 23-வது முறையாகத் தகர்த்து, கோயில் பழங்களையும் ருசித்தது!

கேரள மாநிலம் மூணாறு அருகே கே.டி.எச்.பி. தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமான சொக்கநாடு எஸ்டேட் பகுதியில், ‘படையப்பா’ என்று அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை மீண்டும் தனது ஆக்ரோஷமான அட்டகாசத்தைத் தொடங்கியுள்ளது. இம்முறை சொக்கநாடு சவுத் டிவிஷன் பகுதியில் வசிக்கும் புண்ணியவேல் என்பவரது மளிகைக் கடையை 23-வது முறையாகத் தாக்கிச் சேதப்படுத்தியதோடு, அருகில் இருந்த கோயிலையும் விட்டுவைக்காமல் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மளிகைக் கடை உரிமையாளர் புண்ணியவேல், அதே கடையுடன் இணைந்த வீட்டில் தனது குடும்பத்துடன் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் இவரது மளிகைக் கடையைக் காட்டு யானைகள் 22 முறை தாக்கிச் சேதப்படுத்தியுள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4:00 மணி அளவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த படையப்பா யானை, புண்ணியவேலின் கடையின் சுவர்களையும் கதவுகளையும் பலமாகத் தாக்கிச் சேதப்படுத்தியது. பின்னர் கடைக்குள் இருந்த அரிசி மூட்டைகள், பருப்பு வகைகள் மற்றும் இதர மளிகைப் பொருட்களைச் சிதறடித்துத் தின்று தீர்த்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டிற்குள் இருந்த புண்ணியவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினர்.

மளிகைக் கடையைத் தொடர்ந்து, அதே பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலையும் அந்த யானை குறிவைத்தது. நேற்று ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகளுக்காக வாழைப் பழங்கள் மற்றும் பல்வேறு கனிவகைகள் தட்டில் வைக்கப்பட்டிருந்தன. கோயிலின் கதவு மற்றும் தடுப்புகளைச் சேதப்படுத்தி உள்ளே நுழைந்த படையப்பா, பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கள் அனைத்தையும் தின்றுவிட்டுச் சென்றது. புத்தாண்டு தினத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், கோயிலின் நிலையைப் பார்த்து வேதனையடைந்தனர்.

மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் படையப்பா யானையின் நடமாட்டம் சமீபகாலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலமுறை விரட்டியடித்தாலும் மீண்டும் குடியிருப்புப் பகுதிகளுக்கே வரும் இந்த யானையினால், எஸ்டேட் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புண்ணியவேல் போன்ற சிறு வியாபாரிகள் தங்களது வாழ்நாள் சேமிப்பை யானையிடம் பறிகொடுத்து வருவதால், வனத்துறையினர் படையப்பா யானையை நிரந்தரமாகக் கண்காணிக்க வேண்டும் அல்லது அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனத் தொழிலாளர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version