பள்ளிக்குச் செல்வதற்காகச் சாலையைக் கடக்க முயன்ற பிளஸ்-2 மாணவி மீது முருக பக்தர்கள் வந்த வேன் மோதி கவிழ்ந்ததில், மாணவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 16 பக்தர்கள் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நல்லிகவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40). இவர் தாராபுரம் சர்ச் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கோபிகா (17), தாராபுரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். மாணவி கோபிகா தினந்தோறும் தனது கிராமத்திலிருந்து மொபட்டில் புறப்பட்டு, தாராபுரம் – பழனி சாலையில் உள்ள தாசவநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் வரை வருவார். அங்குத் தனது மொபட்டை நிறுத்திவிட்டு, பின்னர் பேருந்து மூலம் பள்ளிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வழக்கம்போல் கோபிகா தனது மொபட்டில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். தாசவநாயக்கன்பட்டி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்தது. திருப்பூரைச் சேர்ந்த முருக பக்தர்கள் பழனி கோவிலுக்குச் சென்றுவிட்டு, காங்கயம் நோக்கி வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அதிவேகமாக வந்த வேன், சாலையைக் கடந்த கோபிகாவின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையிலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனுக்கு அடியில் சிக்கிய மாணவி கோபிகா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த காங்கயத்தைச் சேர்ந்த செல்வ பரணிதரன் (27), குமாரசாமி (60), ஜவகர் (45), பழனிச்சாமி (40), செந்தில், சுகுமார், தாமரைக்கண்ணன், சேனாதிபதி உள்ளிட்ட 16 பக்தர்கள் காயமடைந்தனர். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக போலீசாருக்கும் ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த அலங்கியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டுத் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாணவி கோபிகாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வேன் ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்குச் சென்ற மாணவி விபத்தில் பலியான சம்பவம் நல்லிகவுண்டன் வலசு கிராமத்திலும், தாராபுரம் பகுதியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் – பழனி சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து, வேகத்தடைகள் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















