எடப்பாடியார் வந்தா தகுதி பட்டியல் கிடையாது.. எல்லா குடும்பத்தலைவிகளுக்கும் ரூ. 2000 ‘கன்பார்ம்’:

மதுரை மாவட்டம் உச்சப்பட்டியில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆணைக்கிணங்க, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு, ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மேடையில் உரையாற்றிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து, திருமங்கலம் தொகுதியில் அதிமுகவிற்கு 10,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுத் தந்த வாக்காளர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இதன் மூலம் திருமங்கலம் தொகுதி என்றைக்கும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்துக் கடுமையாகச் சாடிய ஆர்.பி.உதயகுமார், கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துத் தமிழ்நாடு ரத்தக் களறியாக மாறியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். காவல்துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர், குற்றங்களைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கூறிய அவர், கடந்த ஆறு மாதங்களாகத் தமிழ்நாட்டின் டிஜிபி பதவி காலியாக இருப்பதையும், பொறுப்பு அதிகாரியை வைத்துக் கொண்டு நிர்வாகம் நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டினார். ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு நிகராகப் புகழ்பெற்ற தமிழகக் காவல்துறை, இன்று பெண்களுக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை அறிக்கையாக இல்லாமல், வெறும் சபாநாயகர் உரையாக மட்டுமே சுருங்கிவிட்டது என்றும் சாடினார்.

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், திமுகவைப் போலத் தகுதிப் பட்டியல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றாமல், எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ‘குலவிளக்கு’ திட்டத்தின் கீழ் மாதம் 2,000 ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என உறுதியளித்தார். மேலும், எடப்பாடியாரால் கொண்டு வரப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் விரைவில் முடிவடைந்து, அதனைப் பாரதப் பிரதமரும் எடப்பாடியாரும் இணைந்து திறந்து வைப்பார்கள் என்றார். இது தவிர, 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும், வீடற்றவர்களுக்கு ‘அம்மா வீட்டு வசதித் திட்டம்’ மூலம் வீடுகள் கட்டித் தரப்படும் மற்றும் பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து வசதி செய்து தரப்படும் என அடுக்கடுக்கான வாக்குறுதிகளை வழங்கி ஆர்.பி.உதயகுமார் எழுச்சியுரை ஆற்றினார்.

Exit mobile version