திமுகவை தலைகுனிய விடமாட்டேன் ! ஸ்டாலினுக்கு அவப்பெயர் வராது – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: நகராட்சி நிர்வாகத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை கூறியுள்ள அறிக்கை, திமுகவுக்கும் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு, “என்னால் திமுகவுக்கும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எந்தவித அவப்பெயரும் வராது” என உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

திமுக மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளை கவனித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் அந்தத் துறையில் 2,500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டிருந்தன.

இந்நிலையில், அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் வீடு, அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது. இது இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கடன் மோசடி தொடர்பான விசாரணையின் போது நடைபெற்றதாக கூறப்பட்டது.

அந்தச் சோதனையில், பணியிட நிரப்புதலில் முறைகேடு நடந்ததாகவும், தலா 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், 2,538 இடங்களில் 150-க்கும் மேற்பட்டோர் தவறாக நியமிக்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே பணி உறுதி செய்யப்பட்டதற்கான உரையாடல்கள் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகளும் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை அனுப்பிய 332 பக்க அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு காவல்துறைக்கு விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், திருச்சியில் நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: “எங்களைப் பற்றி ஏதோ பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இது உண்மையல்ல. திமுகவையும், திமுக தலைவரையும் களங்கப்படுத்தவே இத்தகைய முயற்சிகள் நடத்தப்படுகின்றன. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. திமுகவுக்கு அவப்பெயர் வராதபடி நான் எப்போதும் பொறுப்புடன் நடந்து கொள்கிறேன். மத்திய அரசின் பழிவாங்கல் நடவடிக்கை இதற்கு பின்னணியாக உள்ளது,” என்றார்.

அதுமட்டுமின்றி, “தேர்தல் காலம் நெருங்கும் போதெல்லாம் எதிர்க்கட்சிகளை மிரட்டுவது மத்திய பாஜகவின் வழக்கம். உண்மை வெளிவரும் போது எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்பது நிரூபிக்கப்படும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை கூறியுள்ள ஆவணங்களை தமிழ்நாடு காவல்துறை தற்போது ஆய்வு செய்து வருகிறது. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version