மனைவியை போட்டுத்தள்ள துபாயில் இருந்து ஸ்கெட்ச்

சென்னை, சூளைமேடு: விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், துபாயில் இருந்து தனது மனைவியை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சூளைமேட்டில் வசித்து வரும் பெனாசிர் பேகம் (33), ஜூன் 2ஆம் தேதி இரவு தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் பெனாசிர் பேகம் பலத்த காயமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வினோத் (24) மற்றும் மெஹ்ரான் ஆதில் (24) ஆகிய இருவரை கைது செய்தனர்.

விசாரணையில், இந்த தாக்குதலை பெனாசிர் பேகத்தின் கணவர் ஜாகீர் உசேன் (தற்போது துபாயில் வேலைபார்த்து வருகிறார்) திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்து வழக்கு தற்போது சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த சூழலில், ஜாகீர் உசேன் ரூ.1 லட்சம் கூலி பேசிக் கொண்டு, அதில் முதல் கட்டமாக ரூ.40,000 கொடுத்து கூலிப்படையை அனுப்பி மனைவியை தாக்கச் செய்துள்ளார் என விசாரணையில் வெளிவந்துள்ளது.

மேலும், இதற்கு முன் பெனாசிர் பேகத்தின் தந்தையும் இதே மாதிரி இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்று இருந்தது. அதிலும் ஜாகீர் உசேனின் தொடர்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கூலிப்படையை ஏவிய ஜாகீர் உசேனை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட வினோத் மற்றும் மெஹ்ரான் ஆதில் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version