கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் 

கம்பன் விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றக்கூடாது என வலியுறுத்தி திருவாரூரில் 3500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் ரயில் நிலையம் கடந்த 1861 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 165 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் இந்த திருவாரூர் ரயில் நிலையம் வழியாக, தினமும் இரவில் சென்னை செல்வதற்கு வசதியாக காரைக்கால் – சென்னை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கம்பன் விரைவு ரயில் என்ற பெயரில் இயக்கப்பட்டு வரும் இந்த காரைக்கால் – சென்னை விரைவு ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை வரை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வரும் மே 20 ஆம் தேதி முதல் இந்த ரயிலானது திருவாரூர் வழியாக இயக்கப்படாமல், பேரளம் வழியாக காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக திருவாரூர் சுற்றுவட்டார மக்கள் பயன்படுத்தி வரும் காரைக்கால் சென்னை விரைவு ரயிலை திருவாரூர் மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு வேறு பாதைக்கு மாற்றிய தென்னக ரயில்வே முடிவுக்கு திருவாரூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காரைக்கால் – சென்னை விரைவு ரயில் சேவையை, தடம் மாற்றம் செய்யாமல் தொடர்ந்து திருவாரூர் வழியாகவே இயக்க வலியுறுத்தி இன்று திருவாரூர் ரயில் நிலையம் முன்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்கள், வணிகர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள், ரயில் பயணிகள், ரயில் உபயோகிப்பாளர் சங்கங்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தவெக ,திருவாரூர் நகர வீடியோ புகைப்பட கலைஞர்கள் நல சங்கம்,உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் என 3500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Exit mobile version