ரெயில்வே குட்ஷெட்டிற்கு செல்லும் லாரிகளால் திருவாரூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது ,அதிகமான பளு காரணமாக அடிக்கடி லாரிகளின் டயர் வெடிப்பதால் வாகன ஒட்டிகள் அச்சம்.
திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து நாகை செல்லும் பைபாஸ் சாலை என்பது பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலை என்பது நாகை, வேளாங்கண்ணி, மட்டுமின்றி திருத்துறைப்பூண்டி செல்லும் சாலை என்பதால், எந்த நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இதில் ரெயில்வே மேம்பாலம் இறக்கத்தில் ரெயில்வே குட்ஷெட் அமைந்துள்ளது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் அப்பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் இறக்கத்தில் உள்ள இந்த பிரிவு சாலைக்கு திரும்புவதும், எதிர் திசையில் இருந்து நெடுஞ்சாலைக்கு வருவதும் சற்று ஆபத்தானது என்பதால் மிகுந்த கவனமாக செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பொதுவிநியோக திட்டதிற்காக நெல், அரிசி ஏற்றி செல்லும் லாரிகள் குட்ஷெட்டிற்கு செல்வதற்காக இந்த பாதையை பயன்படுத்தி வருவதால் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு புறங்களில் வரும் வாகனங்களும் அணிவகுத்து போக்குவரத்து ஸ்தம்பித்து பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அதிக அளவிலான நெல் மூட்டைகளை ஏற்றி வரும் லாரிகளின் பளு தாங்காமல் அவ்வப்போது லாரிகளின் டயர் வெடிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டுகள் கடும் அச்சத்தோடையே அந்த பகுதியில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே ஆபத்தான இந்த பகுதியில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்காமல் மாற்றுப்பாதையை பயன்படுத்தி விபத்துக்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















