மகாராஷ்டிர மாநிலத்தில் வருகின்ற ஜனவரி 15 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனையும், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனையும் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் செய்தியாளர்களை இருவரும் கூட்டாகச் சந்தித்து, கூட்டணி அமைப்பதாக அறிவித்தனர். பின்னர், இரு குடும்பத்தினரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சிவசேனை கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகிய ராஜ் தாக்கரே, மண்ணின் மைந்தன் என்ற முழக்கத்துடன் மகாராஷ்டிர நவநிர்மான் சேனையை தொடங்கி, 2009 சட்டப்பேரவைத் தேர்தலில் 13 தொகுதிகளில் வென்றார். அதன்பிறகு நடைபெற்ற மற்ற தேர்தல்களில் அவரது கட்சி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
கடந்த ஜூலை மாதம் உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே இருவரும் ஒன்றாக இணைந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் மிகப்பெரிய பேரணியை நடத்தினர். தற்போது உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியாக இருவரும் இணைந்திருப்பது, மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
