ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து முடிவு செய்யும் என்றும், தொகுப்பூதியம் பெறும் செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவது தொடர்பாக, விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம் என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் செவிலியர் சங்க பிரதிநிதிகளுடன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, செவிலியர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து, பரிசீலித்து நிறைவேற்றப்படும் என்று, பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறினார்.
செவிலியர்களின் முக்கியக் கோரிக்கையான புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் 723 செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக, அவர் தெரிவித்தார். தொகுப்பூதியம் பெறும் செவிலியர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், இதுதொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் மா.சுப்பிரமணியன் கூறினார்.














