அத்தியாவசியப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில்கூட திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று செய்திகள் வருகின்றன. இம்மாத்திற்கு 8 ஆயிரத்து 722 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தும், அதை முறையாக ரேஷன் கடைகளுக்கு திமுக அரசு விநியோகம் செய்யவில்லை என்று குறைகூறியுள்ளார்.
இந்த ஆட்சியில் மற்ற துறைகளைக் காட்டிலும், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகக் குறைகூறிய அவர், நெல் கொள்முதல் முதல் தொடங்கி கோதுமை விநியோகம் வரை அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்கும் பணியில்கூட அரசு முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். ரேஷன் கடைகளில் கோதுமை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

















