தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட் ரமணா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது சட்ட விரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது என்று குறிப்பிட்டிருந்தார். எனவே, சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மலேசியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் தேசிய நெடுஞ்சாலைகள் தொடங்கும் இடத்திற்கு முன்னதாக சுங்க கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால், இங்கு, பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிப்பது ஏற்புடையது அல்ல என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரினார்.
தேசிய நெடுஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காக தான், ஆனால், மதுரை-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், சுங்கசாவடிகளை கடந்து செல்வதற்கு பயண நேரத்தில் கூடுதலாக, அரை மணி நேரத்திற்கும் மேல் வீணாகிறது. இதற்கு மாற்று வழி இல்லையா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.