சென்னை : தி.மு.க. ஆட்சி சட்டம் ஒழுங்கை கவனிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரக்கோணத்தில் தி.மு.க. கவுன்சிலரிடம் துப்பாக்கி எவ்வாறு வந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அரக்கோணத்தில் அனுமதியின்றி இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்ததாக தி.மு.க. கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அலங்கோல ஆட்சியின் குறியீடாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த பகுதியில் நடந்த பாலியல் புகார் விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவி தி.மு.க. அரசின் காவல்துறையால் மிரட்டப்படுவதாகக் கூறி வெளியிட்ட காணொளியை உள்ளீடு செய்தார். தி.மு.க. இளைஞரணியினர் மாணவியை மிரட்டியதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்க தவறுகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“போதைப்பொருள் வைத்த இளைஞர்கள், மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாள், இன்று வழக்கமான விஷயமாகி விட்டது. தி.மு.க. கவுன்சிலரிடம் துப்பாக்கி வருவது ஸ்டாலின் மாடலா ?” என்று விமர்சித்தார்.
அத்துடன், “தெய்வச்செயல் மீது தி.மு.க. அரசு காட்டும் பாதுகாப்பு பின்னால் யாராவது பெரிய அரசியல் ‘முதலை’ இருக்கிறதா? அந்த ‘சார்’ யார்?” என்று கேள்வி எழுப்பிய அவர், மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை தங்களது கேள்விகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.
“சட்டம் ஒழுங்கு இந்த நிலைமைக்கு வந்திருக்க, ஒரு முதல்வர் வெட்கப்பட வேண்டிய சூழ்நிலை இது. ஆனால் ஸ்டாலின் சும்மா இருப்பது மிகவும் வருந்தத்தக்கது” என்றும் இ.பி.எஸ். கூறியுள்ளார்.