காரியாபட்டி அ.தொட்டியங்குளத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி வீடுகள், குடிசைகள் இடிப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவிற்குட்பட்ட அ.தொட்டியங்குளம் கிராமத்தில், பல ஆண்டுகளாக நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் மற்றும் குடிசைகள் நேற்று வருவாய்த்துறையினரால் அதிரடியாக அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், கண்மாய்கள் மற்றும் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த பொதுவான உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த நீர்நிலை ஆக்கிரமிப்புப் பிரச்சினைக்குத் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

அ.தொட்டியங்குளம் கிராமத்தின் குடியிருப்புகளை ஒட்டியே ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான பெரிய கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயின் கரையைச் சிலர் உள்நோக்கத்துடன் சேதப்படுத்தி, அந்த நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் குடிசைகளைக் கட்டியிருந்தனர். இதனால் மழைக்காலங்களில் கண்மாய் முழு கொள்ளளவை எட்டும் போது, கரை பலவீனமாக இருந்ததால் தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உடைமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பாக கடந்த 2020-ஆம் ஆண்டில் பூமிநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். நீர்நிலையைப் பாதுகாக்கவும், கரையைப் பலப்படுத்தவும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

நேற்று காலை வட்டாட்சியர் மாரீஸ்வரன் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழுவினர் பொக்லைன் இயந்திரங்களுடன் அ.தொட்டியங்குளத்திற்கு வந்தனர். ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்த வீடுகள் மற்றும் குடிசைகள் இடித்து அகற்றப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திருச்சுழி டி.எஸ்.பி. பிரதீப் தலைமையில், இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி முன்னிலையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, அப்பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களை அகற்ற மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தற்போது மார்கழி மாத விசேஷங்கள் நடைபெறுவதால் கால அவகாசம் கோரினர்.

இது குறித்து வட்டாட்சியர் மாரீஸ்வரன் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவின்படி முதற்கட்டமாக குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மார்கழி மாத வழிபாடுகள் நடைபெற்று வருவதால், மக்களின் கோரிக்கையை ஏற்று வழிபாட்டுத் தலங்களுக்கு மட்டும் தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவற்றுக்கும் முறையான நோட்டீஸ் அனுப்பி, ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது,” எனத் தெரிவித்தார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, கண்மாய் கரையைப் பலப்படுத்தும் பணிகளைத் தொடங்க ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Exit mobile version