இமாச்சல பிரதேசத்தில் தொடர்ச்சியாக கொட்டிய கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மலைச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து, தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர்.
காங்க்ரா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ரவி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் தாக்கத்தில் கிராமங்களை இணைக்கும் இரண்டு பாலங்களும், சில அரசுக் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன. அதேபோல், பழைய மணாலியை இணைக்கும் பாலங்கள் உட்பட பட்லிகுஹல், துண்டி, பஹாங் பகுதிகளில் உள்ள பல பாலங்களும் அடியோடு இடிந்து ஆற்றில் மூழ்கின.
மாநிலம் முழுவதும் 11 மாவட்டங்களில் 536 சாலைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக குலு-மணாலி தேசிய நெடுஞ்சாலை வெள்ளத்தில் துண்டிக்கப்பட்டதுடன், அங்குள்ள சுங்கச்சாவடி கூட வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.
ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பினால் சாலைகள் மட்டுமல்லாது, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அரசுக் கட்டடங்களும் சீட்டுக்கட்டுகளைப்போல சரிந்து விழுந்தன.
இதற்கிடையில், லாஹுல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள டிம்ஃபுக் கிராமத்தில் மலைப்பகுதி திடீரென சரிந்து விழுந்தது. பெரும் சத்தத்தைக் கேட்ட கிராம மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர்.
தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க மாநில அரசு தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
