மத மோதலை தூண்டும் பேச்சு விவகாரம் : ஹெச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை : மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஆர்ப்பாட்ட அனுமதிக்காக இந்து முன்னணி சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுவின் அடிப்படையில் பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், அந்த அனுமதியில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேச்சு விடாதீர்கள், முழக்கங்கள் எழுப்பக்கூடாது என்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார். அவருடைய பேச்சு நீதிமன்ற நிபந்தனைகளை மீறி, மதமோதலைத் தூண்டும் வகையில் இருந்ததாக கூறி, மதுரை சுப்பிரமணியபுரம் காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்தது. இதனடிப்படையில் ஹெச்.ராஜாவுக்கு காவல்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீஸை எதிர்த்து ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், நோட்டீஸை ரத்து செய்ய முடியாது எனக் கூறி ஹெச்.ராஜாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மேலும், காவல்துறையின் விசாரணைக்கு ஹெச்.ராஜா ஆஜராகி ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், நோட்டீஸை எதிர்த்து இந்த வழக்கு தொடர அவர் உரிமையாளர் அல்ல என்றும் நீதிபதி கூறினார்.

Exit mobile version