: தென் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய நீடித்ததால், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த அதீத கனமழையினால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. குறிப்பாக, கடனாநதி அணைப் பகுதியில் மட்டும் சிகர அளவாக 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 1,265 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் ராமநதி (12 செ.மீ.), ஆய்குடி (10 செ.மீ.), கருப்பாநதி (7.5 செ.மீ.) என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பதிவானது. சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் சாலைகளில் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரைச் சேரன்மகாதேவி (10 செ.மீ.), அம்பாசமுத்திரம் (9 செ.மீ.) எனப் பரவலாகக் கனமழை பெய்துள்ளது. மாஞ்சோலை, காக்காச்சி போன்ற மலைப்பகுதிகளில் பெய்த மழையால் பாபநாசம் அணைக்கு 955 கன அடியும், மணிமுத்தாறு அணைக்கு 465 கன அடியும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரத்தில் நடவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மழையின் கோரத்தாண்டவம் குடியிருப்புப் பகுதிகளையும் விட்டுவைக்கவில்லை. சிவகிரி வட்டாரம் ராமநாதபுரம் கிராமத்தில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊராட்சி அலுவலகம், பள்ளி மற்றும் கூட்டுறவு சங்கக் கட்டிடங்களைச் சூழ்ந்த நீரை அகற்றக் கோரியும், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வலியுறுத்தியும் போராட்டங்கள் வெடித்தன. பழைய குற்றால அருவிப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இரும்புத் தடுப்புகள் மற்றும் பாதுகாப்புப் பலகைகள் அடித்துச் செல்லப்பட்டுச் சேதமடைந்தன.
கடனாநதி மற்றும் ராமநதி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாகத் திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. முன்னெச்சரிக்கையாகக் கோயிலின் உற்சவர் சிலைகள் பாதுகாப்பாகக் கரையில் உள்ள கோயிலுக்கு மாற்றப்பட்டன. வழக்கமாக நவம்பர் மாதங்களில் மட்டுமே நிகழும் இந்த நிகழ்வு, தற்போது ஜனவரியிலும் மீண்டும் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
