திருவள்ளூர் :
திருத்தணி அருகே அரசு பள்ளி வளாகத்தில் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்து 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை அருகேயுள்ள கொண்டாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில், 7ஆம் வகுப்பு பயிலும் மோகித் என்ற மாணவன், நேற்று மதிய உணவு இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் கைப்பிடிச் சுவர் அருகே அமர்ந்து உணவு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தச் சுவர் திடீரென சரிந்து மாணவர் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து மாணவனின் சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள், உரிய இழப்பீடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டுமே உடலை வாங்குவோம் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. பாதுகாப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
திருத்தணி அரசு மருத்துவமனையில் மாணவனின் உறவினர்களை சந்தித்து எம்எல்ஏ சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அது உடன்படிக்கையின்றி முடிந்தது. மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “சம்பவம் நடந்த தகவல் கிடைத்த உடனே முதலமைச்சர் மூன்று முறை தொலைபேசி மூலம் விவரம் கேட்டறிந்தார். 2014–15ஆம் ஆண்டுகளில் நபார்டு நிதி மூலம் பள்ளி கட்டடங்கள் அமைக்கப்பட்டன. சம்பவம் நடந்த பகுதி பாதுகாப்பற்றதாகக் கருதி முன்பு அங்கு கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை இரண்டு நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டதால், அந்த இடம் பாதுகாப்பானது என மாணவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று தீர்வு காண்பது அரசின் கடமை. உயிரிழந்த மாணவனின் சகோதரனின் கல்வி தொடர்பான அனைத்து தேவைகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, சம்பவத்தில் அலட்சியம் காட்டியதாக கூறி கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அலட்சியத்தால் மரணம் ஏற்பட்டது என்ற பிரிவின் கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் அமுதா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் ஆகியோர் மீதும் ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

















