மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்து , ஓட்டுனர் உட்பட நான்கு பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் :-
மயிலாடுதுறையில் இருந்து சேத்தூர் நோக்கி 7A என்ற அரசு பேருந்து இன்று அதிகாலை புறப்பட்டு ஆனந்ததாண்டவபுரம் செல்லும் சாலையில் வேப்பங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அதே பகுதியில் புறவழி வழிச்சாலை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே குறுகிய சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது புறவழிச் சாலை பணிகளுக்காக மணல் ஏற்றிக்கொண்டு லாரி திடீரென குறுக்கே வந்துள்ளது. இதனை சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக பேருந்தினை புறவழிச் சாலை அருகே உள்ள வயல்வெளி நிலத்தில் லாவகமாக இறக்கினார். அப்போது லாரி மீது பேருந்து உரசியதில் முன் பக்க கண்ணாடி உடைந்து பேருந்து ஓட்டுனர் சிலம்பரசன் (38) மற்றும் பயணிகள் லலிதா (53), ராஜலட்சுமி (55), அஞ்சம்மாள் (57) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் இருந்தவர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புறவழிச் சாலை பணிகள் விபத்தின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
