ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2012-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமான ஸ்டார்க், இதுவரை 65 டி20 ஆட்டங்களில் விளையாடி 79 விக்கெட்டுகளை குவித்துள்ளார். 7.74 என்ற எகானமியுடன், ஆடம் ஜாம்பாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் அதிக டி20 விக்கெட்டுகளை பெற்ற பவுலராக அவர் திகழ்கிறார்.
ஸ்டார்க், 5 டி20 உலகக்கோப்பைகளில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியுள்ளார். குறிப்பாக 2021-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா அணிக்கு முக்கிய பங்காற்றினார்.
2010-ல் ஆஸ்திரேலியா அணியில் அறிமுகமான ஸ்டார்க், டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவங்களிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை, அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200, 250, 300, 350 விக்கெட்டுகளை எட்டிய சாதனை ஆகியவை அவருக்கு சொந்தமானவை.
2015 ஒருநாள் உலகக்கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல பெரிய கோப்பைகளை ஆஸ்திரேலியாவுக்கு பெற்றுத்தந்தவர் ஸ்டார்க்.
டி20 ஓய்வு குறித்து அவர் கூறியதாவது :
“ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய ஒவ்வொரு டி20 ஆட்டத்தையும் நான் ரசித்தேன். குறிப்பாக 2021 உலகக்கோப்பை வெற்றி மறக்க முடியாத அனுபவம். டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் எனது முதல் முன்னுரிமையாக இருந்து வருகிறது. 2027 இந்திய டெஸ்ட் தொடர், ஆஷஸ் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை ஆகியவற்றில் சிறப்பாக செயல்படுவதற்காக டி20 வடிவத்திலிருந்து விலகுவது எனக்கு சிறந்த முடிவு என்று கருதுகிறேன்” என்றார்.














