சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

சேலம் : சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில், சட்டவிரோதமாக குழந்தை விற்பனை நடைபெறுகிறது என்ற புகாரின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, பச்சிளம் குழந்தையை ரூ.7 லட்சத்திற்கு விற்ற சம்பவத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த மோகன்ராஜ், அவரது மனைவி நாகசுதா ஆகியோர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் பச்சிளம் குழந்தையை எடப்பாடி பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் விற்றது போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்.

போலீசார் கைதுசெய்த இருவரின் செல்போனில் குழந்தைகளின் புகைப்படங்கள், தொடர்புடையவர்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்களுடன் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளின் தொடர்புகள் உள்ளதையும் போலீசார் கூறினர்.

இதனையடுத்து, ஸ்ரீதேவி, பர்வீன், பத்மாவதி, ஜனார்தனன் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், குழந்தை இல்லாத தம்பதிகளை பட்டியலிட்டு, வறுமையில் சிக்கிய குடும்பங்களை குறிவைத்து குழந்தை விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த முயற்சியில் குழந்தையின் பெற்றோருக்கு ஒரு பங்குத் தொகையும் வழங்கப்பட்டிருப்பது அம்பலமானது.

தற்போது, இந்த ஆறுபேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version