தருமபுரம் ஆதீனத்தில் வருகின்ற 3-ம்தேதி சேவை நோக்கத்தோடு பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதற்காக அடிக்கல் விழா

தருமபுரம் ஆதீனத்தில் வருகின்ற 3ஆம்தேதி சேவை நோக்கத்தோடு பல்நோக்கு மருத்துவமனை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுவிழா மூலம் தமிழ்நாடு மயிலாடுதுறையில் சத்குரு சத்யசாய் மதுசூதனன் தடம்பதிக்க உள்ளதாக தருமபுரம் ஆதீனம் பேட்டி;-

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ஆதீன மடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தருமபுரம் ஆதீனத்தின் அடுத்த இலக்காக மருத்துவ சேவை பணிகள் துவங்க உள்ளது. நமது மணிவிழாவிற்கு வருகை தந்த சத்திய சாய் மதுசூதனன் அவர்கள் 60 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்தார்கள் அதன்படி வரும் மூன்றாம் தேதி அன்று மருத்துவமனை அமைக்கும் பணி அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கப்பட உள்ளது. பல்நோக்கு மருத்துவமனையாக தொடர்ந்து சேவை செய்யும் வகையில் மிகப்பெரிய திட்டமாக இதனை இப்பகுதியில் அவர்கள் துவங்குகிறார்கள். சுற்றியுள்ள இரண்டு மூன்று மாவட்டங்கள் சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் வகையிலும் நம் பகுதி மக்களுக்கும் அவசிய தேவையாக மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக சத்ய சாய் மதுசூதனன் அவர்கள் காலை 11 மணியளவில் வருகை தந்து அடிக்கல் நாட்டி வைத்து மூன்று மணி வரை இங்கே தங்க உள்ளார்.

ஆதீனத்தின் கொள்கைப்படி கோவில் குடமுழுக்கு விழா பணிகளை ஓரளவு முழுமையாக முடித்துள்ளோம் அடுத்ததாக கல்வி சேவையை சிறப்பாக செய்து வருகிறோம் அதனை தொடர்ந்து மக்களுக்கு உணவு சேவையை துவங்கினோம் அதுவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அந்த வகையில் மருத்துவ சேவையும் நாம் துவங்க வேண்டும் என எண்ணியிருந்தோம் இது குறித்து நாம் பலரோடு ஆலோசித்த போது சத்குரு சத்திய சாய் மதுசூதனன் அவர்கள் நம்மோடு இணைந்து இதனை செய்வதாக அறிவித்தார்கள். அந்த வகையில் ஒரே உலகம் ஒரே குடும்பம், உலக மனிதாபிமான இயக்கம் நிறுவனர் சத்திய சாய் மனிதவள சிறப்பு பல்கலைக்கழக வேந்தர் சத்குரு மதுசூதனன் சத்திய சாய் அவர்கள் இவ்விழாவிற்கு வந்து அடிக்கல் நாட்ட உள்ளார்கள். ஓராண்டுக்குள் கட்டிடம் கட்டப்பட்டு அதற்கான கருவிகள் கொண்டுவரப்பட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது தொண்டர்கள் மாணவர்கள் கலந்து சேர்ந்து சேவை செய்ய உள்ளார்கள் இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய சேவையாக அமையும்.

அவர்களது மருத்துவக் கல்லூரியில் படித்து உலகம் முழுவதும் பணியாற்றும் மருத்துவர்கள் இதனை சேவையாக செய்து வருகிறார்கள். அவர்கள் மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகளிலே சுற்றுவட்டார பகுதி கிராமங்களை தத்தெடுத்து இலவசமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றனர் ஆகவே அதுபோலவே பொதுமக்களுக்கு இலவச சேவையாகவே தொடரும் நாம் இடம் மட்டும்தான் . மற்ற அனைத்து வசதிகளையும் அவர்கள் செய்கிறார்கள் எவ்வளவு சலுகையுடன் சிகிச்சை அளிக்கப்படும் என்பதை அவர்கள் தெரிவிப்பார்கள் தமிழ்நாட்டில் தற்போது கால்பதிக்கிறார்கள் அதுவும் நமது கோரிக்கையை ஏற்று செய்ய தொடங்குகின்றனர் என்றார்.

Exit mobile version