சென்னை : “வனக்காவலர்கள் தான் காடுகளின் முதுகெலும்பு ; சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள் நீங்கள் தான்” எனத் தெரிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்ந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “இன்று உலக சுற்றுச்சூழல் நாள் மட்டுமல்ல ; நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் இருக்கின்றது என்பதை உணர்விக்க வேண்டிய தினமாகும். காடுகள் தான் இந்த பூமிக்கு மூச்சளிக்கும் நுரையீரல் போன்றவை” எனக்குறிப்பிட்டார்.
மேலும், “வனக்காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதில் எனக்கு பெருமிதம். நீங்கள் தான் காடுகளின் முதுகெலும்பு, சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள். மேப்பில் பச்சைத் திட்டு போல காடுகளை சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது. அவை உயிர்களின் அடிப்படை ஆதாரங்கள்” என்றார்.
தமிழகம் முன்னிலை வகிக்கிறது
தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னணியில் இருப்பதை வலியுறுத்திய முதல்வர், “இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழகத்தைப் போல் எந்த மாநிலமும் அதிக திட்டங்களை கொண்டு செயல்படவில்லை என்பதை அடித்துச் சொல்கிறேன். இதுவரை 1,207 ஹெக்டேர் தரம் குன்றிய சதுப்பு நிலங்களை மீட்டெடுத்துள்ளோம். பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றம் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக சம்பந்தப்பட்டவை. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.
மாற்றமே வெற்றிக்கு வழி
மஞ்சப்பை திட்டம் குறித்து பேசும் போது, “மீண்டும் மஞ்சப்பை திட்டம் அரசின் முயற்சி மட்டுமல்ல ; அது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். திட்டங்களை அரசு உருவாக்க முடியும்; ஆனால் அதன் வெற்றி, மக்கள் தங்கள் தினசரி பழக்கங்களை மாற்றிக் கொள்ளும் உறுதியில்தான் உள்ளது. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், வேறு வழியில்லை. ‘துணிப்பை, தண்ணீர் பாட்டில் இல்லாமல் வெளியே செல்லமாட்டோம்’ என்ற உறுதிமொழியை எடுத்து கொள்ளவேண்டும்” என முதல்வர் வலியுறுத்தினார்.