மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு சிவாலயங்களில் இன்று திருக்கொடியேற்றம் நடைபெற்றது. கங்கை முதலான புன்னிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கிகொண்டதாக புராணம் கூறுகிறது. இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர், வதான்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். ஐப்பசி 1ம்தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. மேலும் பத்துநாள் உற்சவமாக மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிகரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் இன்று திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. மாயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருக்கொடியேற்றம் நடைபெற்றது. திருக்கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி பஞ்ச மூர்த்திகளுக்கான கொடிகள் ஏற்றப்பட்டது. பத்துநாள் உற்சவத்தில், வருகின்ற 11ம்தேதி மாலை மயிலம்மன் பூஜையும், வருகின்ற 13ம்தேதி திருக்கல்யாணமும் 15ம் தேதி திருத்தேர், நடைபெற்று 16ம்தேதி புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரியும், 17ம்தேதி முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
