சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சென்னை : கரூர் கூட்ட நெரிசல் விபத்தைக் குறித்து இன்று தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக தலைவர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “ஒரே இரவில் 39 உடற்கூறாய்வுகள் நடத்தப்பட்டதெப்படி? ஏன் இவ்வளவு அவசரம்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விபத்தில் பலியானவர்களைச் சந்திக்காத முதல்வர் ஸ்டாலின், கரூரில் மட்டுமே ஏன் சென்றார்? மற்ற அமைச்சர்கள் அங்கு செல்லாதபோது, இங்கு மட்டும் சென்றது ஏன்?” எனவும் விமர்சித்தார்.

அதிமுக தலைவர் மேலும், “விஜயின் பரப்புரைக் கூட்டங்களுக்கு முன்பே காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் கூட்ட நெரிசல் பற்றிய தகவல் இருந்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. அதே பகுதியில் அதிமுக கூட்டத்திற்கு அனுமதி மறுத்த அரசு, தமிழ்நாடு வெற்றிக் கழகத்திற்கு எப்படி அனுமதி அளித்தது?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சியில் சொந்தமாக கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களின் பொறுப்பற்ற தன்மையால் உயிரிழப்பு ஏற்பட்டது. அதைப் பற்றி பேசும் கே. பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களைச் சந்திக்கச் சென்றாரா? அப்போது அவர் சொன்ன வார்த்தையை இங்கே சொல்லட்டுமா?” என தாக்கினார்.

மேலும் அவர் கூறுகையில், “கரூரில் நடந்த தமிழ்நாடு வெற்றிக் கழகக் கூட்டத்திற்கு அரசு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கூட்டம் ஏழு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதுவே நெரிசலுக்குக் காரணம். ஒவ்வொரு கட்சியும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

Exit mobile version