மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே உயர்அழுத்த மின்கம்பம் சிதலமடைந்துள்ளதால் அச்சம்

மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பம் சிதிலமடைந்து பள்ளி சுற்றுச்சுவரின் மீது சாய்ந்துள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
மயிலாடுதுறை – கும்பகோணம் பிரதான சாலையையும், மயிலாடுதுறை – கல்லணை சாலையையும் இணைக்கும் முக்கிய இணைப்புச் சாலையோரத்தில் இந்த மின்கம்பம் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டமும் அதிக அளவில் காணப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த உயர் அழுத்த மின்கம்பம் தற்போது பழுதடைந்து பள்ளி சுற்றுச்சுவரின் மீது சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால் பலத்த காற்று, கனமழை அல்லது இயற்கை சீற்றங்களின்போது மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது.
குறிப்பாக கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் தினமும் இந்த வழியாக பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளி வளாகத்திற்கு மிக அருகில் அபாயகரமான நிலையில் மின்கம்பம் இருப்பது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. எதிர்பாராத விதமாக மின்கம்பம் சரிந்து விழுந்தாலோ அல்லது மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தாலோ பெரும் உயிர்சேதம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
விபத்து ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, அதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சிதிலமடைந்த உயர் அழுத்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைப்பதுடன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள், பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version