பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) தந்தை ராமதாஸ் – மகன் அன்புமணி இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று திண்டிவனம் அருகே ஓமந்தூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கட்சியின் செயல் தலைவர் அன்புமணிக்கு எதிராக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில், “பொதுவெளியில் நிறுவனர் ராமதாஸ் பேச்சுக்களுக்கு அன்புமணி கட்டுப்படாமல் செயல்படுவது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறி, அதை கண்டிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனது செயலுக்காக அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கியமாக :
எதிர்கால கூட்டணிகள் குறித்து முடிவெடுப்பதற்கான முழு அதிகாரம் நிறுவனர் ராமதாஸ் ஒருவருக்கே வழங்கப்பட வேண்டும் என தீர்மானம்.
கட்சி அமைப்புகளிலிருந்து அன்புமணி மற்றும் அவரது நெருங்கியர்களான வடிவேல் ராவணன், திலகபாமா ஆகியோர் நீக்கப்பட்டு, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க.வில் தற்போது நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு என மூன்று அதிகார அமைப்புகள் உள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே சிக்கல்கள் மேலும் தீவிரமாகியுள்ளன.