விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு “தமிழக பட்ஜெட்டில் மானியம் இல்லை” என குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான புதிய மானிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை எனக் குற்றம்சாட்டி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டம் தொடங்கிய சில நேரத்திலேயே, தமிழக அரசு விவசாயிகளுக்கு எந்தவித புதிய சலுகைகளையும் அறிவிக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், குறைதீர் கூட்டம் நடைபெறும் நாளில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பெரும்பாலும் கலந்து கொள்வதில்லை என்றும், தாங்கள் அளிக்கும் மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். இது ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பலமுறை கோரிக்கை வைத்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பின்பு ஒருபுறம் தமிழக அரசு விவசாயிகளை புறக்கணித்து வருகிறது; மறுபுறம் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளை முற்றிலும் ஒதுக்கி வருகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டினர். குறிப்பாக, கோட்ட அளவில் நடைபெற வேண்டிய விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், கருங்கோழி பராமரிப்பு தொடர்பாக தமிழக முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு பொய்வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இந்நிலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
வெளிநடப்பால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாக கூறப்படுகிறது
