விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பிச்சை எடுத்து கண்டன ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் கடன் தள்ளுபடி என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து, விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பிச்சை எடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். சிறு குறு விவசாயிகள் என்று வகைப்படுத்தி, தள்ளுபடி அறிவித்திருந்தார். இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. தேர்தல் அறிக்கையில் ஐந்து ஏக்கருக்கு உட்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் முழு தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு, தற்போதைய தள்ளுபடி விவசாயிகளை ஏமாற்றும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ள விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி, மண் சட்டியில் நாமமிட்டு, அலுவலக வாசலில் நின்று பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிர் கடன் அறிவிப்பு மோசடியான ஒன்று என தெரிவித்துள்ள விவசாயிகள், இந்த அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version