வேளாண் பணி செய்யும் விவசாயிகள் மரணம் அடைந்தால் பத்து லட்ச ரூபாய் வழங்கும் அரசியல் கட்சியினருக்கு தங்களின் ஆதரவு என மன்னார்குடியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில செயலாளர் KS.பாலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 31 கோரிக்கைகளை அரசியல் கட்சியினருக்கு விவசாயிகள் முன் வைத்தனர். அதன்படி விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கைவிட வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்கின்றனர். அரசு ஏக்கர் ஒன்றிற்கு 7000 ரூபாய் மட்டுமே நிவாரணம் வழங்குகிறது. தற்போது உள்ள திமுக அரசு ஏக்கர் ஒன்றிற்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டும் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதன் மூலமும் விவசாயிகள் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கடனாளியாகும் சூழல் உள்ளது எனவே விவசாயிகளுக்கு கூடுதல் கடன் நிவாரணம் வழங்க வேண்டும், கரும்பு மற்றும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும், வேளாண் பணி செய்யும் விவசாயிகள் உயிரிழந்தால் அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும், தங்களது கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சியினர் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு தங்களது விவசாய சங்கம் ஆதரவளிப்பதாக வும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் KS.பாலு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில துணை பொது செயலாளர் V.தங்கமுத்து, திருவாரூர் மாவட்ட செயலாளர் s.கண்ணன், மாவட்ட பொறுப்பாளர் M. குமார்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
