மதுரையின் மருத்துவ வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, கிராமப்புற மக்களின் கண் நலனை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட “நடமாடும் கண் மருத்துவ கிளினிக்” சேவை இன்று மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தென் தமிழகத்திலேயே முதன்முறையாக இத்தகைய விரிவான வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவச் சேவையை மதுரையின் பிரபல கண் மருத்துவமனையான ஆதி கண் மருத்துவமனை முன்னெடுத்துள்ளது. இந்த நவீன மருத்துவ வாகனத்தின் செயல்பாட்டினை தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஆதி கண் மருத்துவமனையின் 7-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்காக இலவச கண் பரிசோதனை மற்றும் நிபுணத்துவ சிகிச்சை ஆலோசனைகள் வழங்கும் சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக இச்சேவை அர்ப்பணிக்கப்பட்டது.
இந்தத் தொடக்க விழா நிகழ்வில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எல்.அருள் சுந்தரேஷ்குமார் மற்றும் நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்து, கிராமப்புற மருத்துவச் சேவையின் அவசியத்தை வலியுறுத்தினர். இச்சேவை குறித்து ஆதி கண் மருத்துவமனையின் தலைவர் திருமலைகுமார் பேசுகையில், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் சுமார் 90 சதவீதம் பேர் கண்புரை பாதிப்பால் அவதிப்படுவதாகவும், போதிய விழிப்புணர்வு மற்றும் வசதிகள் இல்லாததால் அவர்களுக்குத் முறையான கண் பரிசோதனை என்பது எட்டாக்கனியாகவே இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார். குறிப்பாக, 85 முதல் 90 சதவீத மக்கள் தங்களுக்கு குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வருவதாகவும், நீரிழிவு நோயால் ஏற்படும் கண் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறியத் தவறுவதால் பலர் நிரந்தரப் பார்வை இழப்பைச் சந்திப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிராமப்புற ஏழை எளிய மக்களின் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்று, குளுக்கோமா, நீரிழிவு பாதிப்புகள் மற்றும் கண்புரை ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்டறியும் வகையில் இந்த நடமாடும் கிளினிக் வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த வாகனம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். அதிநவீன ஸ்கேனிங் கருவிகள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் கொண்ட இந்த வாகனத்தின் மூலம், கண் சார்ந்த பாதிப்புகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு உரிய உயர்தரச் சிகிச்சைகளை வழங்க ஆதி கண் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது. மருத்துவச் சேவையை வணிக நோக்கம் கடந்து கிராமப்புற சேவையாக மாற்றியுள்ள இந்த முயற்சிக்கு மாவட்டத்தின் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
















