“எல்லோருக்கும் எல்லாம்” – சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினைத் தொடங்கி வைத்தார். சாதி, மதம், இனம் என எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில், தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான மயிலாட்டம், கரகம் மற்றும் ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. பொங்கல் பானைகளில் புத்தரிசி இட்டு, “பொங்கலோ பொங்கல்” என்ற முழக்கத்தோடு மக்கள் உற்சாகமாக விழாவைக் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் சமத்துவப் பொங்கல் விழாக்கள் மக்கள் இயக்கமாகக் கொண்டாடப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டு, உழவர்களின் உழைப்பைப் போற்றும் அறுவடைத் திருநாளாக இது திகழ்வதாகவும், தமிழர்களின் அடையாளத்தை நிலைநிறுத்தும் உழவர் திருநாளே உண்மையான சமத்துவத் திருநாள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகியவற்றுடன் சேர்த்து, இந்த ஆண்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் ரூ.3,000 ரொக்கத் தொகையை முதலமைச்சர் வழங்கியுள்ளார் என்பதை அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். தமிழகத்தின் பொருளாதாரம் தற்போது 11.6 சதவீத வளர்ச்சி இலக்கை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இது அரசின் சிறப்பான நிதி மேலாண்மைக்குச் சான்று என்றார்.

அரசின் நலத்திட்டங்கள் குறித்து மேலும் பேசுகையில், தகுதியுள்ள ஒரு கோடியே 33 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதையும், பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்விக்கு உதவும் வகையில் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் என “எல்லோருக்கும் எல்லாம்” என்ற திராவிட மாடல் கொள்கையின் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருவதையும் விளக்கினார். அடித்தட்டு மக்கள் முதல் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இந்த வளர்ச்சிப் பாதையில், இந்தத் தைத்திருநாள் அனைவருக்கும் ஒரு புதிய விடியலாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் அமையும் எனத் தெரிவித்து தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.

Exit mobile version