மயிலாடுதுறை மாவட்டத்தில் தைத் திருநாளான பொங்கலையொட்டி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் பாரம்பரிய முறையில் புத்தரிசியில் புதுப்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபாடு:- பொங்கல் பொங்கி வரும் போது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!! என தாளம் தட்டி குலவையிட்டு உற்சாக கொண்டாட்டம்:-
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று தமிழர்களால் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த தை பெரும் பொங்கல் நாளில் விளைநிலங்களில் விளைந்த புத்தரிசி, காய்கறிகளை சூரியபகவானுக்கு படையலிட்டு வீட்டின் முன்பு வண்ணவண்ண கலர்கோலமிட்டு தை முதல் நாளில் பொங்கலிடுவது வழக்கம். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தரங்கம்பாடி தாலுக்கா கழனிவாசல் கிராமத்தில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு பொங்கல் பானை கரும்பு வரைந்தும், வண்ணவண்ண கலர்கோலமிட்டடனர். அதனை தொடர்ந்து குளித்துவிட்டு பராம்பரிய உடையான வேட்டி சட்டை, புடவை, பாவாடை தாவணி கட்டி புத்தாடை அணிந்திருந்தனர். குத்துவிளக்கு ஏற்றி, பூ, பழங்கள், காய்கறிகள், கரும்பு ஆகியவை வீட்டின் வாசலில் வைத்து சூரிய பகவானுக்கு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி படையலிட்டனர். பின்னர், மஞ்சள் , இஞ்சி கொத்துகளை மண்பானை, பித்தளை பானைகளில் என புதுப்பானைகளில் கட்டி அடுப்பில் வைத்து பால் ஊற்றி, புத்தரிசியிட்டு பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வரும்போது குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!! என தாளம் தட்டி குலவையிட்டு உற்சாகமாக கொண்டாடினர். பின்னர் சக்கரை பொங்கல், வெண் பொங்கல் காய்கறிகள் கூட்டுகளை வைத்து சூரிய பகவானை வணங்கி செல்வம் செழிக்கவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி வீடுகளில் சுவாமி தரிசனம் செய்தனர்.

















