210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் : இபிஎஸ் நம்பிக்கை

சென்னை: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேரடி போட்டி அதிமுக-திமுக இடையே தான் நடைபெறும். திமுக ஆட்சியின் 52 மாதங்களில் எந்த பெரிய திட்டமும் நிறைவேறவில்லை; தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்புகள் குறித்து மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஸ்டாலின் அரசு வெளிநாட்டு பயணங்கள் மூலம் முதலீடு ஈர்த்ததாக கூறினாலும், நடைமுறையில் எந்தப் பயனும் இல்லை.

அதிமுக ஆட்சியில் 2015-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2.42 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்தன. 2019-ல் அதிமுக அரசு 3.05 இலட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து 304 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பெரும்பாலானவை செயல்பாட்டிற்கு வந்ததால் வேலைவாய்ப்புகள் உருவானது.

திமுக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், சமூக நீதி பின்பற்றப்படவில்லை; பட்டியலினத்தவருக்கு அவமரியாதை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஆணவக் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. விவசாயிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வள விவகாரங்கள்

மேகதாது அணை திட்டத்தை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இண்டி கூட்டணியில் இருக்கும் நிலையில் தமிழக நலனுக்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணையை 152 அடி உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் கேரள அரசுடன் திமுக அரசு பேசாமல் பணி நிலுவையில் உள்ளது.

தேர்தல் நம்பிக்கை
“அதிமுக 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்து மக்கள் நலனுக்கான பல திட்டங்களை வழங்கியுள்ளது. அதேபோலவே 2026 தேர்தலிலும் மக்கள் ஆதரவுடன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என இபிஎஸ் தெரிவித்தார்.

Exit mobile version