விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கைகள் முன்வைத்து எதிர்ப்பு.
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு இன்று காலை மாவட்ட பெருந்திட்ட வளாக நுழைவுவாயிலில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொண்டு, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்ற மெஹந்தியை கைகளில் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாக்குரிமையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆனால், நிகழ்ச்சிக்காக தங்களை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும், அதிகாரிகளுடன் கோரிக்கைகள் தொடர்பான சந்திப்பு நடைபெறும் என்றும் கூறி அழைத்து வந்ததாக சில திருநங்கைகள் குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், நீண்டநாள் கோரிக்கையான பட்டா வழங்கப்பட்ட பகுதிகளில் நிலத்தை அளந்து வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் திருநங்கைகள் வலியுறுத்தினர்.
