கல்வியே நல்வாழ்வின் அஸ்திவாரம்”: வத்திராயிருப்பு அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் விநியோகம்!

 மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்கவும், தொலைதூரத்திலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உதவும் வகையிலும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் எஸ்.அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்விப் பயணத்தை எளிதாக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பள்ளித் தலைமை ஆசிரியை சுரேகா தலைமை தாங்கினார். பொருளியல் ஆசிரியர் முருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல தொழிலதிபர் கோவிந்தசாமி, மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி எழுச்சியுரையாற்றினார்.

அவர் தனது உரையில், “ஒரு மனிதனுக்கு நல் ஒழுக்கத்தையும், வளமான வாழ்வையும் கொடுக்கும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே. மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அரசு எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. உங்கள் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்படாதவர்கள் உங்கள் பெற்றோரும், ஆசிரியர்களும் மட்டுமே. எனவே, ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று, ஒழுக்கத்துடன் கல்வி கற்று இந்தச் சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாகத் திகழ வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த விழாவில் ஐ.என்.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை, ஐயப்பன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரெங்கராஜ், முன்னாள் ஊராட்சித் தலைவர் நாகராஜ் மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர். நீண்ட நாட்களாக மிதிவண்டிக்காகக் காத்திருந்த மாணவர்கள், தற்போது அவற்றைப் பெற்றுக்கொண்டதால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

Exit mobile version