மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமைந்துள்ள அ.வல்லாளப்பட்டி கிராமம், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஊராகும். சோழர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியை ஆண்டவர்கள் ‘போசளர்கள்’. கள்ளர் சமூகத்தின் நூற்றுக்கணக்கான பட்டப் பெயர்களில் ‘போசளர்’ என்பதும் ஒன்று. இந்த வம்சத்தைச் சேர்ந்த பெரும்பாலான மன்னர்கள் ‘வல்லாள தேவன்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டனர். இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட அ.வல்லாளப்பட்டியில், தற்போது திரைப்பட இயக்குனர் மோகன் ஜி இயக்கி வரும் ‘திரௌபதி 2’ திரைப்படத்திற்கு எதிராகப் போராட்டக் குரல் எழுந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, மூன்றாம் வல்லாள தேவன் வரலாற்றைத் தழுவி ‘திரௌபதி 2’ படத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் மோகன் ஜி அறிவித்திருந்தார். அப்போது, “வல்லாள தேவனின் உண்மையான வரலாற்றைத் திரித்து, வேறு சமூகத்தின் பெயரால் திரைப்படமாக எடுத்துவிடாதீர்கள்” என அ.வல்லாளப்பட்டி கிராம மக்கள் இயக்குநருக்குக் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர், “படம் முடிவடைந்ததும் உங்களிடம் திரையிட்டுக் காட்டிவிட்டுத்தான் வெளியிடுவேன்” என்று உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன் பிறகு கிராம மக்கள் சார்பில் இரண்டு முறை வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு (Legal Notice) அனுப்பியும், இயக்குனர் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
தங்களது கோரிக்கையைப் புறக்கணித்துத் தவறான வரலாற்றைப் பதிவு செய்ய முயல்வதாகக் குற்றம் சாட்டி, நேற்று அ.வல்லாளப்பட்டி வெள்ளிமலையாண்டி கோவில் முன்பு கிராம மக்கள் திரண்டு கண்டன முழக்கமிட்டனர். “எங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகத் திரையிடப்பட உள்ள ‘திரௌபதி 2’ படத்தை இயக்குனர் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். மீறித் தவறான வரலாற்றோடு படம் வெளியானால், தென் மாவட்டங்களில் அந்தப் படம் வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம்” எனப் பொதுமக்கள் எச்சரித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பலகாரர்கள், இளங்கட்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணர்ச்சிப்பூர்வமாகக் கலந்துகொண்டனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், மதுரையை அச்சுறுத்திய ‘டங்ஸ்டன்’ சுரங்கத் திட்டத்திற்கு எதிராகப் பல லட்சம் மக்களைத் திரட்டி, அந்தத் திட்டத்தையே ரத்து செய்ய வைத்த வரலாற்றுப் போராட்டத்தை முன்னெடுத்த தலைமை கிராமம் அ.வல்லாளப்பட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தன்னரசு மத்தம் மேல் நாட்டின் முதன்மை கிராமமாக விளங்கும் அ.வல்லாளப்பட்டி மக்களின் இந்த தற்போதைய எதிர்ப்பு, சினிமா வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றைச் சிதைக்கும் முயற்சிகளுக்கு எதிராகத் தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
