“உங்களின் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேட வேண்டாம். பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமே தவிர, அது வாழ்க்கை அல்ல. ரீல்ஸ்களில் வரும் அனைத்தையும் உண்மை என நம்ப வேண்டாம்,” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அவர் உரையாற்றியபோது கூறியதாவது:
“ஒரு காலத்தில் கல்வி நமக்கு மறுக்கப்பட்ட ஒன்று. பல போராட்டங்களுக்குப் பிறகே கல்வி கதவு திறக்கப்பட்டது. இன்னும் கல்விக்காக போராடும் மக்கள் உள்ளனர். கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே நான் ‘முதல்வர்’, ‘புதுமைப்பெண்’, ‘காலை உணவுத் திட்டம்’ உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். எல்லாருக்கும் எல்லாம் எனும் நோக்கத்தோடு நாங்கள் செயல்படுகிறோம்.
ஆனால், இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. அதற்கு அரசு துணைபோகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மையினர் நெருக்கடியில் உள்ளனர். இது நிரந்தரம் அல்ல. மத நல்லிணக்கத்தை கெடுக்கும் சக்திகளின் கூட்டம் நீடிக்காது. சாதி, மதப் பிரிவினை பாராமல் அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். தமிழகம் சமத்துவ பூங்காவாக, சகோதரத்துவத்தோடு திகழ்வதற்கு மாணவர்கள் அதே எண்ணத்தோடு வளர வேண்டும்,” என்றார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது:
“அறிவியல் வளர்ந்துள்ளது. அறிவை பெற பல வாய்ப்புகள் உள்ளன. செயற்கை நுண்ணறிவு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ‘செயற்கை நுண்ணறிவு இருக்கிறதே, நாம் ஏன் படிக்க வேண்டும்?’ என்று எண்ண வேண்டாம். எந்தக் கண்டுபிடிப்பையும் உங்கள் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். அது உங்கள் சிந்தனையை சிதைக்கக் கூடாது.
‘Likes’ அல்லது ‘Views’ கெத்து அல்ல. ‘Marks’, ‘Degrees’ தான் கெத்து. படிப்பதோடு விளையாட்டிலும் சிறந்து விளங்குங்கள். உடல்நலனை கவனிக்கவும். எப்படி ‘Upgrade’ ஆக வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை பெற்றோர் கவனமாகக் கேட்க வேண்டும். மனதார பேச வேண்டும். எந்த பிரச்சினையும் குழந்தைகள் பயப்படாமல் பகிரும் வகையில் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். சிறந்த நண்பர்கள் யார் எனக் கேட்டால், குழந்தைகள் ‘அப்பா, அம்மா’ எனச் சொல்லும் நிலைக்கு வர வேண்டும். கல்வி, நண்பர்கள், சூழல் ஆகியவையே குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.”
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.