செங்கல்பட்டு: தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வியை வழங்கும் என்ற நிலையான கருத்தை முறியடிக்க, தமிழகத்தின் ஒரு மாவட்ட நீதிபதி எடுத்த முடிவு, இப்போது சமூகத்தில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. கல்வி என்பது கட்டணத்தில் அல்ல, கற்பித்தலில் இருக்கிறது என்பதை நிரூபிக்க, மாவட்ட நீதிபதி முருகேசன் தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டு பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
யார் இந்த நீதிபதி முருகேசன்?
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. முருகேசன், தற்போது செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூர் பகுதியில் உள்ள முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மகள் புவனேஸ்வரியை, 2025–2026 கல்வி ஆண்டிற்காக ஆலந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் LKG வகுப்பில் சேர்த்துள்ளார்.
“அரசுப் பள்ளி நம் பெருமையின் அடையாளம்!”
மகளை சேர்த்த பிறகு, அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களிடம் நேரில் பேசிய நீதிபதி “தாய் மொழியில் கற்கும் கல்வியே வாழ்க்கையில் நிலைத்த முடிவுகளை எடுக்க உதவும். அரசுப் பள்ளியில் சேர்த்தது என் மகளுக்கான சிறந்த முடிவாக இருக்கும் என நம்புகிறேன்.” என கூறினார். அவரது இந்த பேச்சு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஆசிரியர்கள் பாராட்டு
மகிழ்ச்சியுடன் நீதிபதியின் மகளை வரவேற்ற ஆசிரியர்கள் கூறினர்: “உங்களைப் போன்ற ஒருவர் உங்கள் பிள்ளையை எங்கள் பள்ளியில் சேர்த்தது மற்றவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும். இது அரசு பள்ளிகளின் மதிப்பை உயர்த்தும்.”
இந்த நிகழ்வு ஒரு முக்கியமான செய்தியாகவே மாறியுள்ளது. தனியார் பள்ளிகள் தான் ஒரே தேர்வாக இருக்க வேண்டும் என்பதில்லை என்பதை திரு. முருகேசன் தனது செயல்வழியாகச் சொல்லிக் காட்டியுள்ளார்.
தனியார் கல்வி கட்டணம் எடுத்து கவலையில் வாழும் பல பெற்றோர்களுக்கான வழிகாட்டியாக, இந்த செய்தி சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது.