திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல வேண்டும் என கூறி இந்து முன்னணியினர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு…

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவிற்குட்பட்ட கீரந்தங்குடி பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் பங்குனித் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில் இரண்டு வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதாலும், வருவாய் கோட்டாட்சியர் பங்குனி திருவிழாவை கொண்டாட தடைவிதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று இந்து முன்னணியினர் மற்றும் பிஜேபி நிர்வாகிகள் தடையை மீறி பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக கூறி தகராறில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும், அர்ச்சனை, பூஜைகள் செய்வதற்கும் எவ்வித தடையும் விதிக்கப்படாமல் வழக்கம்போல் கோவில் நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலையில், இந்து முன்னணியினர் பால்குடம் எடுத்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து காவல்துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்து சுமூக நிலை ஏற்பட நடவடிக்கை எடுத்தனர் இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version