தருமபுரி : லஞ்சம் வாங்கிய தலைமைக் காவலர் கையும் களவுமாக கைது !

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மதனேரிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சக்திகுமார் (வயது 36) மீது, 2021ஆம் ஆண்டு பாலக்கோடு காவல் நிலையத்தில் ஆபாசமாக பேசியதும், பொருட்களை சேதப்படுத்தியதும், கொலை மிரட்டல் விடுத்ததும் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில், அந்த வழக்கில் ஜாமீன் பெற அதிகாரிகள் மூலம் உதவி தேடிய சக்திகுமாரிடம், கணினிப் பிரிவில் பணியாற்றும் தலைமைக் காவலர் சுரேஷ் (வயது 46) ரூ.10,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்திகுமார், தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூ.10,000 மதிப்புள்ள பணத்தை அவரிடம் கொடுத்து, சுரேஷிடம் வழங்க ஏற்பாடு செய்தனர்.

பணத்தை பெற்றுக் கொண்ட காவலர் சுரேஷை, பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அவர் வசமிருந்த ரசாயனம் தடவிய பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version