முடிதிருச்சம்பள்ளியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் ஐதீக திருவிழா பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள்

மயிலாடுதுறை அருகே முடிதிருச்சம்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் ஐதீக திருவிழாவான மயான கொள்ளை திருவிழாவில் சுடுகாட்டில் கிழங்கு படையலை பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் கொள்ளையிட்டு பொது மக்களுக்கு வழங்கிய நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்:-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் பழமையான புகழ் பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. சுவாமிக்கு விசேஷ சந்தன அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினர்.
பின்னர் அங்காள பரமேஸ்வரி மற்றும் வீரபத்திரர் சுவாமி தனித்தனியே சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு வீதியுலாவாக (சுடுகாடு) மயானத்தை அடைந்தது. வீதிகள் தோறும் பொதுமக்கள் அர்ச்சனை செய்து, பூ மாலை, சாக்லேட் மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து அங்கு விரதம் இருந்த பக்தர்கள் மயானத்தில் காணிக்கையாக வழங்கிய கிழங்கு வகைகள், நவதானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தன. சுவாமி தீபாரதனைக்கு பிறகு பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் கிழங்கை கொள்ளையிட்டு பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த கிழங்கை பக்தர்கள் உண்ணுவதால் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், நோய்கள் அனைத்தும் தீரும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு கிழங்கு வகைகளை எடுத்துச் சென்று ஆலயத்தில் அம்மனை தரிசித்து கிழங்கை உண்டு வழிபாடு செய்தனர். முன்னதாக சுவாமி வீதியுலாவின் போது சமுக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமியர்கள் பொதுமக்களுக்கு ஜூஸ் வழங்கியது வரவேற்பை பெற்றது.

Exit mobile version