வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, எஃப்பிஐ முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கோமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேம்ஸ் கோமி, 2013ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சியில் எஃப்பிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2017ஆம் ஆண்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றதும், கோமி அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சமீபத்தில், கோமி கடற்கரையில் உள்ள கடல் ஓடுகளை ‘8647’ என அமைத்து ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இந்த பதிவுக்குப் பின்னால் மறைமுக மிரட்டல் உள்ளதாக டிரம்பின் மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் குற்றம் சாட்டினார். இதில், ‘86’ என்பது “அழிக்கவேண்டும்” எனும் அர்த்தத்தில் FBI-யில் பயன்படும் குறியீடாகவும், ‘47’ என்பது டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபர் என்ற அடையாளமாகவும் கூறப்படுகிறது.
இதனால் சர்ச்சை எழுந்த நிலையில், கோமி அந்தப் பதிவை நீக்கினார். தனது நோக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும், தானொன்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து, உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கிரிஸ்டி நோம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சட்டபூர்வமான விசாரணை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.